Tuesday, 17 January 2017

குறள் கற்போம் - தொடர் - 01

தமிழ்ப் பட்டறை.
🔩🔩🔩🔩🔩🔩

திருக்குறளை எளிமையாகக்
கற்று அறிவோம். - தொடர் - 01.
👀👀👀👀👀👀👀👀👀👀👀👀

முகவுரை:
✒✒✒✒

இனிய பெருந்தகையீர், வணக்கம்.

 திருக்குறள் வள்ளுவரால் படைக்கப்பட்டு
ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும்,
நம் மக்கள் அதன் பயனை முழுமையாக
இன்னும் பெறமுடியாமல் இருக்கின்றார்கள்
என்பதே உண்மை!

 அதற்கு முகமையான காரணம், குறள்களை
முறையாகப் படித்து  அவற்றின் பொருளையும்
எளிதாகப் புரிந்து கொள்ளாமல் போனதுதான்!
அத்தகையஎளிய முறையை மக்களுக்குக்
கொண்டுபோய்ச் சேர்க்காததும் கல்வியாளர்
களின்  குற்றமே என்றாலும் தவறாகாது!

 உலகில் உள்ள அத்துணை நூல்களிலும்
காணாத அரிய செய்திகளையும்,
மாந்தர்க்கான ஒழுக்கமும் பண்பாடுகளும்
பொதிந்த அறநெறிக் கோட்பாடுகளையும்,
வெறும் 2260 அடிகளில், ஏறத்தாழ 7910
சீர்களுள் ( அசைகள் இணைந்த
சொற்கள்) சற்றேறத்தாழ 14, 000 சொற்க
ளுக்குள் இந்நூலைப் படைத்தளித்துள்ளார்
வள்ளுவர்.

 செய்யுள் வடிவில் அமைந்த நூல்களுள்,
திருக்குறள் மட்டுமே ஓரளவே கல்வி
கற்றவர்களும்  எளிமையாகப் படித்தறியக்
கூடிய அமைப்பில் எழுதப்பட்ட நூலாகும்.
ஆனால், இதனைச் சரியான முறையில்
மக்களுக்கு விளக்கிச் சொல்லாமையால்,
திருக்குறள் என்றாலே அதனை ஓர்
எட்டிக்காய்  என்று கருதிக் கொண்டு எட்டியே
நிற்கின்றர்.

  இதுவரையில் எண்ணூறுக்கும் மேற்பட்ட
உரைநூல்கள் தோன்றிவிட்ட நிலையிலும்,
உரைநூல் இல்லாமலே இந்நூலைப் படித்தறிய
முடியும் என்பதை விளக்குகின்ற நூலொன்று
இதுவரையில் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை!
அந்தக் குறையை நீக்க வேண்டும் என்னும் ஒரே
நோக்கில்தான் இந்தப் படையல் அமைந்துள்ளது
எனலாம்.
ஆம்!
திருக்குறள் எப்படி, என்னென்ன சிறப்புகளைக்
கொண்டு அமைக்கப்பட்டள்ளது? வள்ளுவர்
இதனை எவ்வாறு அமைத்துள்ளார் என்பது
போன்ற குறிப்புகளை எடுத்து விளக்கிச்
சொல்லிவிட்டாலே,  ஓர் ஆசிரியரின் துணை
இன்றியே ஒருவர் குறளின் கருத்துகளை
மேலோட்டமாக அறிந்து கொண்டுவிட
முடியும். இக்கூற்றுப் பலருக்கு வியப்பைத்
தரலாம்! பலர் இதனை ஏற்கவும் மறுக்கலாம்!
ஆனால், இத் தொடரை ஒருவர் பொறுமையுடன்
முழுமையாகப் புரிந்து  கொண்டு தொடர்ந்து
படித்து  வருவாரேயானால், நான் கூறுவதில்
உள்ள உண்மையை அறிந்து கொள்வார்.

  குறளை மட்டுமே அல்லாமல் , இந்நூலைப்
படைப்பதற்கு என்னென்ன இலக்கணக்
கூறுகளை எல்லாம் வள்ளளுவர் பயன்
படுத்தியுள்ளார் என்பதுடன், குறளிலுள்ள
அருஞ்சொற்களுக்குஎல்லாம் பொருளும்
 விளக்கமும், பிழைகள் இல்லாமல்
தமிழை எழுதும் முறையையும், இன்னும்
பல விரிவான செய்திகளையும் இங்கு
அறிந்து கொள்ள இருக்கின்றோம்.
தமிழ் இலக்ணத்தையும் நல்ல தமிழையும்
ஒருசேரக் கற்றறிந்த நிறைவையும்
பெறலாம்.

அனைத்திற்கும் மேலாக, வள்ளுவர்
திருக்குறளை இயற்றியுள்ள மூல
பாடத்தையும், அது எவ்வாறு இப்போது
நம்மால் எளிதாகப் படித்தறியும்  வகையில்
ஆக்கப்பட்டுள்ளது என்றவாறான இரு
கோணங்களிலும் திருக்குறளைப் படித்து
அறிந்து கொள்ள விருக்கின்றோம்.

ஒன்றை நாம் உணர வேண்டும்.
திருக்குறளில் தாம் பயன்படுத்தி
யுள்ள சொற்களில், திருவள்ளுவர் ஒரு
சொல்லைக் கூடப் பயனில்லாச் சொல்லாக
ஆளவில்லை என்பதும், ' இல்' என்னுமாறு
வரக்கூடிய ஒரு குறிலுடன் இணையும்
ஓர் ஒற்றெழுத்தை  இணைத்த சொற்களே
நூற்றுக் கணக்கில் இடம்பெற்று இல்லம் ,
இல்லை, போன்ற பொருள்களைக் குறித்து
நிற்கக் காணலாம்.
'பயனில சொல்லாமை'  என்னும் ஓர்
அதிகாரமே இயற்றிப், பயனிலாச்
சொற்களைப் பயன் படுத்துபவனை ஒரு
மகனாகக்( மாந்தனாக) கூடக் கருதாமல்,
மக்களுள் பதர் எனவே கருதற்குரியவன்
என்பார். ஒருவர் பேசும் பேச்சும் பயனுடைய
சொல்லாகவே இருக்க வேண்டும் என
வலியுறுத்தும் வள்ளுவரையே
நாம் பெற்றுள்ளோம் என உள்ளம்
உவக்கலாம்.

இவ்வாறாகத்  தமிழும் குறளும் சார்ந்த
அரிய செய்திகளையெல்லாம் மக்களுக்குக்
கொண்டு சேர்க்கும் ஓர் அரும் படையலாகவே
நம் தமிழ்ப் பட்டறை இத்தொடரைப்
படைக்கவிருக்கின்றது எனலாம்.

இனியும் காலங்கடத்தாமல் நம் கற்றலைத்
தொடங்கிவிடலாம்.

நூல் பகுப்பு முறை:
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

திருக்குறளைப் பற்றிப்  பலர் அறிந்திருந்தாலும் ,
அறியாதவர்களும் சிலர் இருப்பர் என்பதால், ஒரு
சிறு அறிமுகத்துடனாவது இதனைத்
தொடங்குவதே  நயத்தக்கதாகும் எனக் கருதி
இங்கு அதனைப் படைக்கின்றேன்.

உலகப் பொதுமறை என்றும், தமிழ்மறை என்றும்
போற்றப்படும் நம் திருவள்ளுவர்  யாத்த
"திருக்குறள்"  என்னும் நூல், ஏறத்தாழ 2046
ஆண்டுகளுக்கும் முற்பட்ட நம் தமிழ்நாட்டின்
குமுக (சமுதாய)  நிலை, கலை, பண்பாடு,
நாகரிகம், அரசியல் போன்றவற்றில் நிலவிய
தன்மைகளை எல்லாம் அறிந்து கொள்ளக்கூடிய
ஒரு காலக் கண்ணாடியாகத் திகழ்வதுடன்,
மாந்தவினத்திற்கு மிகத்தேவையான வாழ்வியல்
என்னும் வாழ்க்கை முறையின் அறநெறிகளைத்
தொகுத்துத் தந்துள்ள ஒர் ஒப்பற்ற
பேரிலக்கியமாகும். இதுபோன்றதொரு நூலை
உலகில் வேறு யாருமே இதுவரை இயற்றியதில்லை
என்னும் பெருமைக்குரிய அறநூலாகும்!
அதுவும் நம் தாய்மொழியாகிய தமிழ்மொழியில்
இந்நூல் இயற்றப்பட்டுள்ளதற்காக நம் தமிழர்
ஒவ்வொருவரும் பேருவகையும் பெருமிதமும்
கொள்ளலாம்.

    இத் திருக்குறளில், 133 அதிகாரங்களும்,
ஓர் அதிகாரத்திற்குப் பத்துக் குறள்களாக
மொத்தம் 1330 குறட்பாக்களும் உள்ளன.
133 அதிகாரங்களும் அறத்துப்பால், பொருட்பால்,இன்பத்துப்பால் (காமத்துப்பால்)
என மூன்று பால்வகைகளாகப் பிரிக்கப்பட்டு,
அறத்துப்பாலில் 38 (1-38) அதிகாரங்களும்
(380 குறள்கள்),  பொருட்பாலில் 70 அதிகாரங்-
களும் (39-108= 70×10=700 குறள்கள்,)
இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்களும்
[(109-133) =  (25×10=250- குறள்கள்)] என
133 அதிகாரங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

  இந்த 133 அதிகாரங்களுள், அறத்துப்பாலில் :
(1) பாயிரவியல் (2) இல்லறவியல் (3) துறவறவியல்
(4) ஊழியல் என நான்கு இயல்களும் ;

பொருட்பாலில்-
(1) அரசியல்
(2) உறுப்பியல்: என இரண்டு இயல்களும்,
          உறுப்பியலில்:-
          1. அமைச்சு
          2  நாடு
          3. அரண்
          4. பொருள்(கூழ்)
          5. படை
          6. நட்பு
          7. குடி   என்னும் உட்பிரிவுகளும்,

இன்பத்துப்பாலில்-
(1). களவியல்
(2). கற்பியல் -  என  மொத்தமாக:

1. பாயிரவியல்,  2. இல்லறவியல்,
3. துறவறவியல்,
4. ஊழியல்,  5. அரசியல்,  6. உறுப்பியல்,
7. களவியல்,  8. கற்பியல்

ஆகிய எட்டு இயல்கள்  அடங்கியுள்ளன.

இனி, இந்த எட்டு இயல்கள் பற்றிய ஒரு சிறிய
விளக்கத்தையும் பார்க்கலாம்.

(1) பாயிரவியல்:      
🍂🍂🍂🍂🍂🍂🍂.              ..... தொடரும். - 02.
----------------------------
அன்புடன் உங்கள்,
குறளோவியன்  கல்லூர் அ. சாத்தப்பன்.
⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳


No comments:

Post a Comment